Thursday 22 November 2018

அவன் விதி – சிறுகதை


எனது மைத்துனரின் கலியாணவீட்டிற்காக கனடா போயிருந்தேன். கலியாணத்தின் போது எனது பள்ளி நண்பன் சதீசை சந்தித்தேன். அவன் தான் ஒரு அதிசயச் செய்தி ஒன்றைச் சொன்னான்.

எங்களுடன் படித்த மனோரஞ்சன்---மனோ---கனடாவில் பெரிய செல்வந்தனாக இருக்கின்றான். பல உணவகங்களுக்குச் சொந்தக்காரன். 25 மில்லியன்  மேற்பட்ட வியாபாரத்தைக் கொண்டது.

25 மில்லியன் டொலர்கள்….

இந்த விடயம் எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. இது எப்படி நிகழ்ந்தது?

Thursday 8 November 2018

பள்ளிச் சிறுமியின் பருவச்சுமை






அண்டனூர் சுராவின் ’கொங்கை’ நாவலை முன் வைத்து

தமிழர் பாரம்பரியத்தில் ஒரு பெண் பூப்பெய்திவிட்டால், அதை ஒரு சடங்காக ‘சாமர்த்திய வீடு’ என்னும் பெயரில் கொண்டாடிவிடுவார்கள். புலம்பெயர்ந்த நாடுகளில் இன்னும் சிலர் அதற்குப் பெரிய விழாவே எடுத்துவிடுவார்கள். பெண்ணைக் ஹெலிகொப்டரில் ஏற்றி இறக்கி, பெரிய அரியணையில் மேள தாளங்களுடன் சுமந்து வந்து தாலாட்டி விடுகின்றார்கள். ஒருமுறை சிட்னி நகரில் எனது நண்பர் ஒருவரின் பிள்ளையின் சாமர்த்தியவீட்டிற்கு மெல்பேர்ண் நகரில் இருக்கும் நானும் மனைவியும் வேலையில் விடுப்பு எடுத்துக் கொண்டு போனபோது, வேலைத்தலத்தில் அதை விளங்கப்படுத்தப் பட்ட பாடு சொல்லிமாளாது. இதற்குச் சடங்கா? எங்கள் நாட்டில் பண்பாட்டில் இது இல்லையே எனப் பலர் சொன்னார்கள். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் ஒரு சில நாடுகளில் பெண் பருவமெய்திவிட்டால் அவர்களின் வீட்டு வாசலில் கொடி கட்டிப் பறக்கவிடுவார்கள் என்றும் கேள்விப்பட்டிருக்கின்றேன்.

இது ஒருபுறமிருக்க, சமீபத்தில், அவுஸ்திரேலியாவில் எனது இன்னொரு நண்பரின் பெண் எட்டு வயதிலேயே பெரியவளாகிவிட்டாள். மகிழ்ச்சி கொள்ளவேண்டிய தந்தை பெரும் துயரத்திற்கு உள்ளானார். மிகவும் சிறிய வயதிலே-பேதைப் பருவத்திலே-இது நடந்தமைக்கு யார் என்ன செய்யமுடியும். அவர் காதும் காதும் வைத்ததுமாப்போல் நாலுபேருடன் சடங்கை முடித்துவிட்டார்.

Tuesday 6 November 2018

கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்தும் சிறுகதைப் போட்டி – 2018


கனடாவில் கடந்த 25 வருடங்களாகப் பல்வேறு வழிகளில் கலை, இலக்கிய சேவையாற்றிவரும் கனடா தமிழ் எழுத்தாளர் இணையம், தனது  25வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தும் உலகளாவிய சிறுகதைப் போட்டி.

பரிசு பெறும் எழுத்தாளர்களுக்காகப் 16 பரிசுகள், மொத்தம் இலங்கை நாணயம் 170,000 ரூபாய்களும்;,  சான்றிதழ்களும் காத்திருக்கிறன.

பரிசுபெறுகின்றவர்கள் வாழும் நாடுகளில் உள்ள நாணயப் பெறுமதிக்கு ஏற்ப அவர்களுக்குரிய பரிசு, நாணய மாற்றம் செய்யப்படும்

முதலாவது பரிசு இலங்கை ரூபாய்கள் – 50,000
(அமரர் பண்டிதர் எவ். எக்ஸ். அலெக்ஸாந்தர் ஞாபகார்த்தமாக.)

Friday 2 November 2018

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில் அவுஸ்திரேலியா எழுத்தாளருக்கு முதல் பரிசு.

போடி மாலன் நினைவு சிறுகதைப் போட்டி முடிவுகள் - 2018

2018 ஆம் ஆண்டு போடி மாலன் நினைவு சிறுகதைப் போட்டிக்கான பரிசு பெறும் கதைகளைத் தேர்வு செய்யும் இறுதிக்கட்ட பணி அக்டோபர் 31 அன்று நடைபெற்றது.

நடுவர் குழு தோழர்கள் ம.காமுத்துரை, தேனி சீருடையான், அல்லி உதயன் ஆகியோர் சிறந்த கதைகளை முதல் மூன்று சுற்றுகளில் தேர்வு செய்தனர். இறுதிச் சுற்றில் பரிசுக்குரிய கதைகளை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளர் எழுத்தாளர்.உதயசங்கர் அவர்களை தலைமையாகக் கொண்டு நடுவர் குழு இறுதி செய்தது.

மொத்தம் போட்டிக்கு வந்த கதைகள் : 337

பரிசுபெற்ற சிறுகதைகள் விவரம்

முதல் பரிசு:

பாம்பும், ஏணியும் - கே.எஸ்.சுதாகர் (ஆஸ்திரேலியா)

இரண்டாம் பரிசு:

குறத்திகள் ஆடும் மூன்றாம் ஜாமம் - சிவக்குமார் முத்தய்யா (சென்னை)

மூன்றாம் பரிசு :

சபீரின் உம்மா கதை சொல்வதில்லை - இடலாக்குடி அசன் (நாகர்கோவில்)

Thursday 1 November 2018

வளர்த்தவர்கள் – சிறுகதை

ஆராதனாவிற்குத் திருமணம். தாலி கட்டி முடிந்துவிட்டது. எல்லாரும் வரிசையில் நின்று மணமக்களுக்கு அட்சதை தூவி வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள். ஹோல் நிரம்ப மகிழ்ச்சி ஆரவாரம்.

ஆராதனாவிற்கு சமீபத்தில்தான் பதினெட்டு வயது முடிந்திருந்தது.

ஆராதனாவின் அப்பா வழி உறவினர்கள் எல்லாரும் வாழ்த்துத் தெரிவிக்கையில் “நான் தான் ஆராதனாவைத் தூக்கி வளர்த்தேன்” என்று மறக்காமல் மாப்பிள்ளையிடம் சொன்னார்கள். அம்மா வழி உறவினர்களுக்கு அந்த பாய்க்கியம் கிடைக்கவில்லை.

“நான் தான் ஆராதனாவைத் தூக்கி வளர்த்தேன்.”
“நான் தான் ஆராதனாவைத் தூக்கி வளர்த்தேன்.” மாப்பிள்ளைக்குக் கேட்டுக் கேட்டுப் புளித்துவிட்டது.

சுமதி மச்சாள் அட்சதை போடும்போது, அதற்கும் மேலே போய், “உன்ரை அம்மா இதையெல்லாம் பாக்கக் குடுத்து வைக்கவில்லையே” என மூக்கால் சிணுங்கி ஆராதனாவைக் கட்டிப்பிடித்து அழுதாள். ஆராதனாவின் கண்கள் குளமாகின.

Tuesday 23 October 2018

தெரிவு – குறும்கதை


இலக்கியவிழா. திரு. சின்ராஜ் அவர்கள் சிறப்பு விருந்தினராக ஈழத்திலிருந்து வருகை தந்திருந்தார். சின்ராஜ் பிரதேசச் செயலாளர், எழுத்தாளர், கல்விமான் என்ற மகுடங்கள் கொண்டவர். அவரது முகத்தைப் பார்த்த மாத்திரத்தில் எங்கோ நிரம்பப் பழகியவர் போன்றிருந்தது.

ஆம்! சின்ராஜ் வேறு யாருமல்ல. என்னுடன் பதினொராம் வகுப்பு வரையும் ஒன்றாக விஞ்ஞானம் படித்த சின்னராசாதான்.

Monday 15 October 2018

’ஜமீலா’ நாவல் (சிங்கிஸ் ஜத்மாத்தவ் / தமிழில்:பூ.சோமசுந்தரம்)

இது ஒரு சோசலிச இலக்கியம். கதை கிர்கீஸிய (Kyrgyzstan) என்னும் இடத்தில் நடைபெறுகின்றது. இதன் அயல் நாடுகளாக கஸ்கஸ்தான், சீனா இருக்கின்றன. இந்தக்கதையின் கதைசொல்லி---கிச்சினே பாலா---தன் பதின்ம வயதில் நடந்தவற்றைச் சொல்கின்றான். அப்போது அவனுக்கு வயது 15. இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற காலம். அவனது சொந்தபந்தங்கள் கூர்ஸ்க்கிலும் ஒர்யோலிலும் உள்ள போர்முனைகளில். பெண்களும் போர்முனைக்குச் செல்ல இயலாதவர்களும் சிறுவர்களும் கூட்டுப்பண்ணையில் வேலை செய்கின்றார்கள். வயலில் வேலை செய்வதும் தானியத்தை ரயில் நிலையத்திற்குக் கொண்டு செல்வதும் அவன் வேலை. அவனது இரண்டு சகோதர்களும் போர்முனையில். தாயாரும் தங்கையும் வீட்டில். முதிய தகப்பனார் தனது தச்சுக்கூடத்தில் வேலை செய்கின்றார்.

அவனது பக்கத்து வீட்டு (சிறியவீடு என்று அழைப்பார்கள்) நெருங்கிய உறவினர் ஒருவர் இறந்துவிட, அவரது விதவையை அவனின் தகப்பனார் மணந்து கொள்கின்றார். விதவையின் இரண்டு மகன்கள்கூடப் போர்முனையில். மூத்தவன் ஸாதிக் மணம் முடித்து சிறிது காலத்திற்குள்ளாகவே போர்முனைக்குச் சென்றுவிட்டான். ஸாதிக்கின் மனைவிதான் ஜமீலா. அவர்களும் கூட்டுப்பண்ணையில் வேலை செய்கின்றார்கள்.

Sunday 9 September 2018

தகவல் பகிர்வு : இலங்கைத் தமிழ்க் குறும்படத் திரைக் கதைப் போட்டி 2019




காக்கைச் சிறகினிலே இதழ்க் குழுமம் முன்னெடுக்கும்
நான்காவது ஆண்டு கிபி அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு 2019 (வள்ளுவராண்டு 2050)

குறும்படத் திரைக் கதைப் போட்டி : ‘இலங்கைத் தமிழர் வாழ்க்கை’ : பூர்வீகம் - இடப்பெயர்வு – புலப்பெயர்வு - இதனோடான தொடர்ச்சியும் நீட்சியும்

காக்கைச் சிறகினிலே இதழ்க் குழுமம் தமிழ் இலக்கிய போட்டியாக முதல் முறையாக « குறும்படத் திரைக் கதைப் போட்டி » நடாத்துகிறது. இந்த முதற் போட்டியின் கதைக் களத் தெரிவாக « இலங்கைத் தமிழர்கள் வாழ்க்கை » எனும் தலைப்பு தெரிவுசெய்யப்பட்டிருக்கிறது. உலகப் பெரு வெளியில் அளப்பெரிய அனுபவங்களைச் செறிவாகப் பெற்றுள்ள ஓர் இனக்குழுமாக இந்த இலங்கைத் தமிழர்களது வாழ்வு அமைந்திருக்கிறது.

Friday 20 July 2018

ஒரு பள்ளம் மேடாகின்றது - நூல் அறிமுகம்

 

அண்டனூர் சுரா எழுதிய ‘முத்தன் பள்ளம்’ நாவலை முன்வைத்து.

’மேன்மை’ வெளியீடாக வந்திருக்கும் இந்த நாவலை தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையைப் பூர்வீகமாகக் கொண்ட அண்டனூர் சுரா (சு.ராஜமாணிக்கம்) எழுதியிருக்கின்றார். நாவலுக்குள் நுழைவதற்கு முன்னர், அதன் சமர்ப்பணத்தை ஒரு தடவை பார்த்து விடுவோம்.

‘முத்தன் பள்ளம் கிராமத்திற்கு ஒரு சாலை வசதி, மழைக்கு ஒழுகாத கூரை, பருவப்பெண்களுக்கேனும் ஒரு பொதுக்கழிப்பறை, குடியிருப்பிற்கு பட்டா, அங்காடி, அங்கன்வாடி, பள்ளிக்கூடம், தேர்தல் காலத்திலேனும் வேட்பாளர்கள் வந்துபோக ஒரு பொதுவழிப்பாதை, ஓர் அச்சமுமில்லாமல் பெண் எடுத்தல் – கொடுத்தல், மழைக்காலங்களில் கூரைத்தண்ணீர் ஒழுகியோட விலைக்கேனும் ஒரு சாண்நிலம், வெயில் காலங்களுக்கு ஓர் ஒட்டகம், மழைக்கு பரிசல், வாழும் சந்ததியினருக்கு குறைந்தபட்ச மரியாதை, ஒன்றிய வரைபடத்தில் தனித்த இடம் இவற்றில் ஒன்றேனும் இக்கிராம மக்களுக்குக் கிடைக்க யாரேனும் ஒருவர் காரணமாக இருப்பாராயின் அவரது திருவடிக்கு….!’

சமர்ப்பணம் இப்படியென்றால், இந்த நூலுக்கு அணிந்துரை எழுதிய நாஞ்சில் நாடன் இன்னும் ஒருபடி மேலே போய் – ‘அந்த ஒருவரின் காலடி மண்ணை எடுத்து நெற்றியில் திருநீறாகவோ திருமண்ணாகவோ அணிய நாமும் சித்தமாக இருப்போம்’ என்கின்றார்.

Friday 22 June 2018

மழையில் நனைந்த உறவு


சிசு.நாகேந்திரன்

“அவனுக்கென்ன, போய்விட்டான். போகும் இடம் சொல்லாமலே போய்விட்டான்.  அரைமணித்தியாலம் சொர்க்க சுகத்தையும், ஐந்துநிமிட இன்பத்தையும் தந்துவிட்டுப்  போய்விட்டான்.  அவனைப்பற்றிய தகவலே இல்லை. அன்று எனக்கு இன்பமூட்டி என்னை ஏமாற்றிவிட்டுப் போனவனை நான் எப்படித் தேடிக் கண்டுபிடிப்பது? எங்குதான் சென்று தேடுவது? விலாசமும் இல்லை. பெயர்மட்டும் தெரிந்தால் போதுமா? அவனுடன் தொடர்புகொள்வதுதான் எப்படி? ஒருவேளை பெயரும் உண்மையான பெயராக இருக்குமோ, என்னவோ!”

நந்தினி வேதனையுடன் மனம்புழுங்கிக்கொண்டு இடிந்துபோய், திண்ணைக் கப்புடன் சாய்ந்துகொண்டு, மடித்த முழங்கால்களுக்கிடையில் தலையை முட்டுக் கொடுத்தபடி, அழுது வடிந்துகொண்டிருந்தாள்.   அவளின் உள்ளத்தில் ஏக்கம் நிறைந்த எண்ணங்கள் மேலும் ஓடிக்கொண்டிருந்தன. ……

“இளம் பெண்ணாக, அதுவும் கன்னித்தன்மையைப் பறிகொடுத்த துர்ப்பாக்கிய வதியாக, நான் வெளியே புறப்பட்டு, அவனைத் தேடுவது சாத்தியமாகுமா? அவனைக் கண்டுபிடிக்காவிடில் என் கதி என்ன?  நான் ஒரு மடைச்சி! ஏமாளி! பொறுப்பில்லாதவள்! அன்று அவன் காட்டிய அனுதாபத்தில்  ஏமாந்து என்னைப் பறிகொடுத்தேனே! எவ்வளவு மோட்டு முண்டம்! எனது உடம்பில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் மற்றவர்களுக்குத் தெரியாது, ஆனால் எனக்குத் தெரியும்தானே!…….  சரி, அதை இப்போது நினைத்து அழுவதில் என்ன பயன்?

Sunday 17 June 2018

பொன்சொரிந்த பொற்காலம்(பகுதி 2)


யூனியன்கல்லூரி நினைவுகள் பதிவுகள்

அந்தக் காலத்தில், ஒரே நேரத்தில் பல மாணவர்கள் நீர் அருந்த முடியாமல் இருந்தது. இதனால் பல மாணவர்கள் தெருவைக் கடந்து அப்பால் இருந்த தேநீர்க்கடைகளிலும், சாப்பாட்டுக் கடைகளிலும் நீர் பருகினார்கள். சிலர் அருகில் இருந்த வீடுகளிற்கும் சென்றார்கள். இந்தச் சிக்கலை நிவர்த்தி செய்ய 1980 ஆண்டில் ஏறக்குறைய 3000 மாணவர்கள் பாவிக்கக்கூடியவாறு பெரியதொரு தண்ணீர்த்தொட்டியை அதிபர் அமைத்துத் தந்தார். மேலும் இதே ஆண்டில் மாணவர்களுக்கு சீருடை அறிமுகப்படுத்தப்பட்டது. கனிஷ்ட பிரிவு ஆண்கள் நீல காற்சட்டையும் வெள்ளை சேட்டும், ஏனையவர்கள் யாவரும் வெள்ளை ஆடையும் காலணியும் அணிந்து வந்தார்கள்.

Sunday 10 June 2018

பொன் சொரிந்த பொற்காலம் (பகுதி 1)



யூனியன் கல்லூரி நினைவுகள் பதிவுகள்

பொற்கால யூனியனின் மைந்தன் நான்.

யூனியன் கல்லூரி மைதானத்தின் கிழக்கில் அமைந்த தகரக்கூரைக் கட்டடத்தில் நான் எனது ஆறாம் வகுப்பை ஆரம்பித்தேன். அப்போது அங்கு தந்தை செல்வா பாடசாலை இருக்கவில்லை. யூனியன் கல்லூரி ஒரே பாடசாலையாக இருந்தது. 1979ஆம் ஆண்டு தை மாதம் யூனியன் கல்லூரியில் இருந்து ஆரம்ப பிரிவு பிரித்தெடுக்கப்பட்டு, தந்தை செல்வா தொடக்கநிலைப் பள்ளி ஆரம்பமானது. அதன்பின்னர் யூனியன் கல்லூரியில் ஆறாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்புவரை நடைபெற்றது.

யூனியன்கல்லூரியில் இரண்டு அதிபர்கள் சேவையில் இருந்த காலங்களில் நான் அங்கு கல்வி பயின்றுள்ளேன். ஒருவர் திரு. நடராஜா, மற்றவர் திரு. கதிர். பாலசுந்தரம்.

Monday 28 May 2018

மூடியிருக்கும் கதவுக்குப் பின்னால்…….


சிசு.நாகேந்திரன்      

     அறைக்கதவு மூடியிருக்கிறது.  அறைக்குள் யார் இருக்கிறார்களென்று எனக்குத் தெரியும்.  ஆனால் என்ன செய்கிறார்களென்று அறியமுடியவில்லை.  கதவில் தட்டி அதைத் திறக்கச் சொல்ல எனக்கு உரிமையில்லை.  உள்ளே நடப்பதை நான் அறிய வேணுமென்ற ஆவல் என்னுள்ளே நின்று உழத்துகிறது.  ஆனால் அறியவேணுமென்ற அவசியமில்லை. தேவையுமில்லை. பின் எதற்காக ஆத்திரப்படுகிறாய் என்று கேட்காதீர்கள்.

     அறைக்குள் ஒரு குரல் அனுங்குமாப்போல் கேட்கிறது.  இன்னொரு குரல் ஏதோ சமாதானப் படுத்துமாப் போலும் கேட்கிறது.  

மனிதாபிமானமுள்ள ஒருவன் இதை எப்படி தாங்கிக்கொண்டிருப்பான்! 

Tuesday 15 May 2018

குட்டி இளவரசன் - வயது வந்தோர்க்கான சிறுவர்நாவல்?


 

கூரியரில் ஒரு பார்சல் மகனுக்கு வந்திருந்தது. கையெழுத்திட்டு அதைப் பெற்றுக் கொண்டபோது ஒரு ஏமாற்றம். பெட்டியின் உருப்படிக்கு அது பாரமற்று இருந்தது.

அதை உடைத்து உள்ளே இருப்பதை மகன் காட்டினான். அது ’அப்பிள் மக் புக்’கில் ஒட்டக்கூடிய ஒரு பெரிய ஸ்ரிக்கர். அலுங்காமல் குலுங்காமல் நசியாமல் வந்து சேர்வதற்குத் தான் அந்தப்பெரிய பெட்டி. இரண்டுபேருமே சிரித்துக் கொண்டோம். அதன் பின்னர் அந்த ஸ்ரிக்கரைக் காட்டி ‘இது என்ன?’ என்று ஒரு போடு போட்டான் மகன். தூரத்தில் நின்று பார்த்த நான் ‘மலை’ என்றேன். பின்னர் சந்தேகம் வரவே கிட்டச் சென்று பார்த்துவிட்டு ‘தொப்பி’ என்றேன்.
எத்தனையோ பேருக்கு நான் இப்படி வரவேண்டும், இதற்குத்தான் படிக்க வேண்டும் என்று ஆசை இருந்தாலும், அவற்றையெல்லாம் பெற்றோருக்காக மூட்டைகட்டி வைக்கவேண்டி ஏற்பட்டுவிடுகின்றது. அதே போல் இந்தப்புத்தகத்தின் கதைசொல்லிக்கும் ‘தான் ஒரு ஓவியனாக வரவேண்டும்’ என்றொரு ஆசை இருந்திருக்கின்றது. ஆனால் பைலற் ஆகிவிடுகின்றார்.

Monday 7 May 2018

’அக்கினிக்குஞ்சு’ இணையத்தளம் ஏழாவது ஆண்டு நிறைவு விழா


ஏழாவது ஆண்டினை நிறைவு செய்து, எட்டாவது ஆண்டினில் அடியெடுத்து வைக்கின்றது அக்கினிக்குஞ்சு இணையத்தளம்.

1991 ஆம் ஆண்டிலிருந்து சஞ்சிகை வடிவில் பல இதழ்களை மணம் பரப்பி, பின்னர் இருபது ஆண்டுகள் கழித்து இணையத்தளமாக வடிவெடுத்து இன்று ஏழு ஆண்டுகளைப் நிறைவு செய்கின்றது அக்கினிக்குஞ்சு.

செய்திகள், கதைகள், கட்டுரைகள், கவிதைகள், நாவல், சினிமா, நேர்காணல்கள், ஒளிப்படைப்புகள் என பல்சுவை அம்சங்கள் கொண்ட இந்த இணையத்தளம், பல்லாயிரம் வாசகர்களைக் கொண்டுள்ளது என்பதை இணையத்தளத்தில் வரும் வாசகர் கடிதங்கள் உணர்த்துகின்றன. ஒவ்வொரு வருட முடிவிலும் புத்தக வெளியீட்டுவிழா, சிறுகதை – குறுநாவல் போட்டிகள் என அசத்தும் இவ் இணையத்தளம் இவ்வருடம் இசையருவிப் பாடல் போட்டி, படைப்பாளர்/கலைஞர் கெளரவிப்பு என வருகின்றது மகிழ்ச்சியைத் தரும் செய்தி.



தனி ஒரு மனிதனாக, ஃபீனிக்ஸ் பறவை போல், துடிப்புடன் இயங்கும் யாழ். பாஸ்கருக்கு வாழ்த்துக்கள்.

Saturday 5 May 2018

கடைசிக் குற்றவாளியின் மரணவாக்குமூலம் – சிறுகதை


மெல்பேர்ண் நகர வைத்தியசாலை. ஏழாம் இலக்க வார்ட்.

நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. ஒரு வெள்ளை இன முதியவர்---நோயாளி---வார்டின் முன்புறமாக அங்குமிங்குமாக நடக்கின்றார். நடப்பதும், பின்னர் தனது படுக்கையில் ஏறி இருந்து பெருமூச்சு விடுவதுமாக இருக்கின்றார்.

கடந்த நான்கு நாட்களாக அவர் மனம் பரிதவித்தபடி இருக்கின்றது. கடைசிக்காலம். மனம் ஏதோ சொல்ல விழைகின்றது.

பார்த்தால் பெரிய இடத்து மனிதர் போல தோற்றம். இன்னமும் கம்பீரம் குலையவில்லை. நிமிர்ந்த நடை. கண் பார்வைக்குக் குறைவில்லை. தினமும் அவரின் மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என ஒரு பட்டாளமே வந்து பார்த்துவிட்டுச் செல்கின்றார்கள். கலகலப்பான மகிழ்ச்சி ததும்பும் குடும்பம்.

திடீரென்று தனக்குப் பக்கத்தில் இருந்த ’தாதியரைக் கூப்பிடும் பட்டனை’ அழுத்தினார். அமைதியாக இருந்த ஏழாம் உவார்ட்டை அந்தச் சத்தம் அல்லோலகல்லோலப் படுத்தியது. ஒரு பெண் தாதி ஓடி வந்தாள்.

“பெரிய டாக்டரை நான் பார்க்க வேண்டும்.”

“ஏன் எங்களைப் பற்றி முறையிடவா?”

“இல்லை. என்னைப் பற்றி முறையிட வேண்டும்.”

Tuesday 1 May 2018

இந்த மாமியார் கொஞ்சம் வித்தியாசமானவர் – குறும்கதை



பாபுவின் மனைவி சசிகலா-சசி- கர்ப்பிணியாக இருந்தாள். அவளைப் பார்க்கும் சாட்டில் பாபுவின் பெற்றோர் பிறிதொரு மாநிலமான சிட்னியில் இருந்து வரவிருப்பதாக பாபு, தன் நண்பன் முகுந்தனிடம் சொன்னான். அவர்கள் வந்து போனதன் பிற்பாடு சசியின் பெற்றோர் வளைகாப்பு வைத்து, பிள்ளைபேற்றை ஒழுங்குமுறையில் கொண்டாட இலங்கையில் இருந்து வர இருக்கின்றார்கள் என்றும் சொன்னான்.

அவன் இந்தச் செய்தியைச் சொல்லி இரண்டுநாட்கள் இருக்கும், பாபுவின் தாயார் சிட்னியிலிருந்து முகுந்தனிற்கு ரெலிபோன் செய்தார்.

“தம்பி… வாறகிழமை மெல்பேர்ணிற்கு வாறம்.”

“ஓம் அனரி தெரியும். பாபு சொன்னவன்.”

“ஆனால் இது உமக்குத் தெரியாது. நாங்கள் உம்முடைய வீட்டிலைதான் தங்கப் போறம். இரண்டுகிழமைதான் நிற்போம்.”

Sunday 22 April 2018

கங்காருப் பாய்ச்சல்கள் (28)


மின் இணைப்பு

அவன் அந்த வீட்டை நிமிர்ந்து பார்த்தான். வீட்டின் முன்புறத்தில் ஒருவர் கார் கழுவிக் கொண்டிருந்தார்.

|பெரியவரே, நீங்கள் எந்தக் கம்பனியின் மின் இணைப்பைப் பாவிக்கின்றீர்கள்?|

ஈரம் சொட்ட நின்ற அந்த வீட்டு மனிதர், அந்தப் பையனை நிமிர்ந்து பார்த்தார். தோளிலே ஒரு சீலைப்பை. கையில் ஒரு ஃபைல்.

|அதை நான் உனக்கு சொல்லப் போவதில்லை.| மூச்சிரைக்கச் சொன்னார் அவர். கார் கழுவுதல் என்பது இலகுவான வேலையல்ல. தனது வேலைக்கு இடையூறு தருகின்றானே என்பது அவர் கோபம்.

|எல்லா வழங்குனர்களையும்விட உங்களுக்கு மிகவும் குறைவான விலையில் நாம் தருவோம்.|

|கெதியிலை இந்த இடத்தை விட்டுப் போய்விடு. எனக்கும் உனக்கும் சண்டை வரப்போகுது.|

Wednesday 18 April 2018

தூக்கிய திருவடி – சிறுகதை


ஜெயந்தி காலை ஆறு மணிக்கெல்லாம் வேலைக்குக் கிழம்பிவிடுவாள். வீட்டில் உள்ளவர்களுக்கு ‘பாய்’ சொல்லிவிட்டு, கதவைத் திறந்து வெளியே எட்டிப் பார்த்தாள். மெல்லிய இருட்டு. கதவைப் பூட்டிவிட்டு காரில் ஏறப் போனவள் பதறியடித்துக் கொண்டு மீண்டும் வீட்டிற்குள் ஓடிவந்தாள்.

“காரைக் காணவில்லை. ஓடியாங்கோ எல்லாரும்”

சில மாதங்களாக இங்கே விநோதமான கார்த் திருட்டுகள் நடக்கின்றன. நம்பர்பிளேற் திருட்டு, காருக்கு கல்லுகளை அடுக்கிவிட்டு நான்கு ரயர்களையும் கழட்டிக் கொண்டு போதல், பெற்றோலை உறுஞ்சி எடுத்தல் போலப் பல வகை.

“பதறாதையப்பா. முதலிலை வேலை செய்யிற இடத்துக்கு இண்டைக்கு வேலைக்கு வரேலாது எண்டு சொல்லும். பிறகு பொலிசுக்கு அடிப்பம்” என்றான் கணவன் குமரேசன்.

பிள்ளைகள் வீட்டில் இடி விழுந்தாலும் எழும்ப மாட்டார்கள்.

Wednesday 11 April 2018

மொழியியல் விருதினைப் பெற்றுக்கொள்கின்றார் ஜெயராமசர்மா


 தமிழ்நாடு அரசினால் வழங்கப்படும் அதியுயர் விருதான மொழியியல் விருதினை - அவுஸ்திரேலியா மெல்பேர்ணைச் சேர்ந்த மகாதேவாஐயர் ஜெயராமசர்மா அவர்கள் பெற்றுக் கொள்கின்றார்.








Tuesday 10 April 2018

' உலகத் தமிழ்க் குறுநாவல் போட்டி 2018' - (வள்ளுவராண்டு 2049) காக்கைச் சிறகினிலே மாத இதழ் முன்னெடுத்த கவிஞர் கி பி அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு - முடிவுகள் :

காக்கைச் சிறகினிலே இதழின் தொடக்க நெறியாளராகப் பணியாற்றி மறைந்த கவிஞர் 'கி பி அரவிந்தன்' கனவின் மீதியில் எழும் தடமாக இந்தப் போட்டி அமைகிறது. பாரதி கண்ட "சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச் செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் !" என்ற கனவை நனவாக்கும் முயற்சிகளில் ஒன்றாகவும் தொடரப்படுகிறது.
இதற்கமைய நடாத்தப்பட்ட ‘உலகத் தமிழ்க் குறுநாவல் போட்டி 2018’. உலகளாவிய சுயாதீனப் படைப்புகளை வழங்கும் எழுத்தாளர்களைக் கௌரவிக்கும் போட்டியாகும்.

தொன்மமும் நீட்சியுமாக நீண்ட நெடிய பயணத்தில் இயங்கும் தமிழ் இயல் - இசை - நாடகமென்ற முத்தளத்தையும் கடந்து ‘கணினித் தமிழாக’ புதிய பரிமாணத்தில் இன்று பவனி வரும் சூழலில், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்!’ என்றபடி பாரெங்கும் விரவித் தொடரும் வாழ்வின் அசைவினைப் பதியும் படைப்புகளை ஊக்குவிக்கும் உலகத் தமிழ்ப் படைப்புப் போட்டி.யாகும்.நெறியாளர் தமிழ் இலக்கிய ஆர்வலர் மதிப்புக்குரிய இ. பத்மநாப ஐயர் அவர்களது வழிகாட்டுதலுடன் உலகளாவிய தமிழ் எழுத்தாளர்கள் கொண்ட நடுவர் குழு பரீட்சித்து எட்டப்பட்ட முடிவுகள்.

Saturday 24 March 2018

கடமை கடவுளிடம் சேர்க்கும் - சிசு.நாகேந்திரன்


முற்றும் துறந்த முனிவர் ஒருவர் ஒரு பெரிய விருட்சத்தின் கீழ் ஆழ்ந்த நிட்டையில் இருக்கும்பொழுது அவரது உடம்பில் ஏதோவொரு எச்சம் விழுந்ததை உணர்ந்தார். உடனே அவர் அண்ணாந்து பார்க்கையில் தலைக்குமேலே மரக்கிளையில் ஒரு கொக்கு இருப்பதைக் கண்டு அதை உற்றுப் பார்த்தார். அவரது பார்வையில், பாவம், அந்தக் கொக்கு எரிந்து சாம்பலாகிவிட்டது. அவரது தவப்பயன் அத்தனை வலிமை கொண்டது. உடனே போய் ஆற்றிலிறங்கிக் குளித்து உடம்பைச் சுத்தம்செய்துகொண்டார்.  

Sunday 18 March 2018

விதியின் வழியே மதி செல்லும் - சிசு.நாகேந்திரன்


ஒரு மனிதனின் வாழ்க்கையானது அவன் முன்பு செய்துகொண்ட நல்வினை தீவினைகளைப் பொறுத்தே அமையும்.  அவனுடைய பிராரத்துவ வினைகளின் பயனை அடைவதற்கு ஏற்ற விதத்தில்தான் அவனுடைய வாழ்க்கைமுறைகள், வாழ்க்கைவசதிகள், கல்வி, செல்வம், பெற்றோர், மனைவி, பிள்ளைகள், சுற்றம் சூழல் முதலிய யாவும் ஏலவே அமைக்கப்பட்டிருக்கும்.  மனிதன் தன் வாழ்க்கையைத் தன்னிஸ்டப்படி நடத்துவதாக எண்ணிக்கொண்டிருக்கிறான். அது அவனுடைய அறியாத்தனமாகும்.  ஏற்கனவே தண்டவாளம் போடப்பட்டுவிட்டது.  ஓடும் ரயில் அத்தண்டவாளத்தில்தான் போகலாம்.  தான் விரும்பியவாறு பாதையை மாற்றிப் போகமுடியாது.  அதேபோலத்தான் மனிதவாழ்க்கையும்.   வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சமும் ஏற்கனவே விதியினால் திட்டமிடப்பட்டு அது நியமித்தபடியே நடந்தேறும். இதற்கு உதாரணமாக ஒரு சிறு கதையை இங்கு பார்ப்போம்.

Monday 12 March 2018

விக்ரர் துறைமுகமும் ’கிரனைட்’ தீவும்


ஊர் சுற்றிப் புராணம் – தெற்கு அவுஸ்திரேலியா

விக்ரர் துறைமுகம் (Victor Harbour) தெற்கு அவுஸ்திரேலியாவின் கடல் சார்ந்த ஒரு நகரமாகும். அடிலையிட் நகரத்தில் இருந்து 80 கி.மீ தெற்குப்புறமாக உள்ளது.
 

அங்கே பார்ப்பதற்கு பல இடங்கள் இருக்கின்றன. அவற்றுள் பிரசித்திபெற்ற ஒன்று ‘கிரனைட் தீவு’ (Granite Island). இது ஒரு ஆளில்லா தீவு. சுற்றுலாப்பயணிகளைக் கவர்ந்திழுக்கும் இடம். 500 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் நிலத்திற்கு அடியில் உருகிய பாறைகளினால் (Magma) உருவானவை இந்த கிரனைற் பாறைகள். மழை, கடல் அலைகள், காற்று என்பவற்றினால் கரையோரம் அரிக்கப்பட்ட பொழுது இந்தத் தீவு வெளித் தோன்றியது. Ramindjeri இன ஆதிவாசிகள் இங்கே வாழ்ந்தார்கள். அவர்கள் இந்த நிலப்பரப்பிற்கு Nulcoowarra எனப் பெயரிட்டிருந்தார்கள். காலப்போக்கில் அவர்கள் இடம்பெயர்ந்துவிட்டார்கள்.

Tuesday 6 March 2018

அன்பென்று கொட்டு முரசே! காதலர் தினப் போட்டி


அன்பென்று கொட்டு முரசே!

காதலர் தினப் போட்டி


போட்டியில் எனது நான்கு சிறுகதைகள் உள்ளன. நண்பர்கள், வாசகர்கள் படைப்புகளை வாசித்து - பிரதிலிபியில் படைப்புகளின் கீழே உங்கள் கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகின்றேன்.. படைப்புகள் வாசகர் பார்வைக்கு ஏப்ரல் 11 வரை இருக்கும். போட்டி முடிவுகள் ஏப்ரல் 13 ஆம் தேதி அறிவிக்கப்படும்.

சுட்டிகள் கீழே -

இமைப்பொழுதும் என் நெஞ்சில்

லவ் லெட்டர்

மரத்துடன் மனங்கள்




 

Thursday 1 March 2018

மணவினைகள் யாருடனோ - மாயவனின் விதி வகைகள்


மூன்று முடிச்சு

கமல் + ஸ்ரீதேவி + ரஜனி

அப்போது (1976) நான் எட்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன். அண்ணா – கே.கே.எஸ், சுண்ணாகம் தியேட்டர்களுக்குப் போகும்போது அவருடன் சைக்கிளில் தொத்திக் கொண்டு படம் பார்க்கப் போய் விடுவேன். ஆனால் மூன்று முடிச்சு படத்தை அண்ணாவுடன் பஸ்சில் சென்று யாழ்ப்பாணத்தில் பார்த்தேன். தியேட்டரின் பெயரை இப்போது மறந்துவிட்டேன்.

இப்போது நினைவு மீட்டிப் பார்க்கும்போது, இந்தப் படத்தில் நடித்தபோது ஸ்ரீதேவிக்குப் பதின்மூன்று வயது என்பதை நம்ப முடியாமல் இருக்கின்றது. வயதுக்கு மீறிய தோரணையில் (18 வயதுப் பெண்ணாக) அவர் அந்தப் படத்தில் நடித்திருப்பார். கமல் ரஜனியுடன் போட்டி போட்டுக் கொண்டு, உண்மையில் சொல்லப் போனால் நடிப்பில் எல்லோரையும் விஞ்சி நிற்பார் ஸ்ரீதேவி.

கே.பாலசந்தர், கவிஞர் கண்ணதாசன், எம்.எஸ்.வி கூட்டுச் சேர்ந்தால் சொல்லத் தேவையில்லை. அதேபோல் கமல் ஸ்ரீதேவி ரஜனி. பொதுவாக பாலசந்தர் இரண்டு மூன்று கதைகளை வைத்துக் கொண்டுதான் எல்லாப் படங்களிலும் சிலம்பம் ஆடுவார். அவற்றைத்தான் சுற்றிச் சுழட்டி மாற்றி மாற்றித் தருவார். அதில் அவர் கை தேர்ந்தவர். கதை வசனகர்த்தாவான அனந்து அவரின் வலது கரம்.

Wednesday 21 February 2018

முகநூல் நண்பர் தங்கேஸ் மறைவு


நேற்றைய தினம் (20.02.2018) வேலை முடித்து வீடு வந்ததும், முகநூலைத் திறந்தபோது அந்த அதிர்ச்சி காத்திருந்தது.

தங்கேஸ் இராசையா காலமாகிவிட்டார் என்ற செய்தி. என்னுடைய வயதுதான் அவருக்கும் இருக்கும்.

2015 ஆம் ஆண்டு சித்திரை மாதம் முகநூலின் மெசஞ்சர் (messenger) மூலம் என்னுடன் தொடர்பு கொண்டார். கதிர்.பாலசுந்தரம் அவர்கள் எழுதிய ‘வன்னி’ நாவலினால் ஈர்க்கப்பட்டு, அதன் புத்தக வடிவத்தை எப்படிப் பெற்றுக் கொள்ளலாம் என்று கேட்டிருந்தார். அப்போது ‘வன்னி’ நாவல் எனது blog இல் தொடராக வந்துகொண்டிருந்தது.

Thursday 15 February 2018

முறே ஆறு (Murray River)

ஊர் சுற்றிப் புராணம் – தெற்கு அவுஸ்திரேலியா
அவுஸ்திரேலியாவின் மிக நீண்ட ஆறு முறே (Murray River) நதியாகும். ஏறத்தாழ 2508 கி.மீ நீளமுடையது. இது ‘அலப்ஸ்’ மலைத்தொடரில் உற்பத்தியாகி, அவுஸ்திரேலியாவின் அதியுயர் மலைகளின் மேற்குப்புறமாக வடிந்து, நியூசவுத்வேல்ஸ், விக்டோரியா மாநிலங்களைக் கடந்து தெற்கு அவுஸ்திரேலியாவை வந்தடைகின்றது. தெற்கு அவுஸ்திரேலியாவின் அலெக்ஸ்சான்றினா ஏரியை (Lake Alexandrina) வந்தடையும் ஆறு பின்னர் இந்துசமுத்திரத்தின் தென்கிழக்குப் பகுதியில் கலக்கின்றது.

Murray Mouth என்னும் இடத்தில் உப்புநீரும்salt water) நல்லநீரும் (fresh water) கலக்கின்றன

கண்டங்களில் மிகவும் வறட்சியான அவுஸ்திரேலியாவின் பயிர்ச்செய்கைக்கு முறே ஆறு பெரும் பங்காற்றுகின்றது, 

Thursday 8 February 2018

கறுப்புத்தானே இப்ப காப்பாற்றுகின்றது!

(50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை)

”கமலா…. சரியான கறுப்பு.”
சந்திரனின் காதலை, அக்கா சுகந்தி தீவிரமாக எதிர்த்தாள்,.

சந்திரனின் தாயாரின் முயற்சியால் திருமணம் இனிதே நடந்தது.

எல்லாரும் அகதியாக அவுஸ்திரேலியா குடியேறுகின்றனர்.
அம்மாவைக் கூப்பிட்டது மகன். அம்மாவுக்கு சென்ரர்லிங் காசு வருவதால், அம்மாவை வைத்திருப்பது மகள்.

அம்மா இப்போது மூப்படைந்து விட்டாள். நோயினால் மலசலம் எல்லாம் படுக்கையுடன்.

”வீடு மணக்கின்றது. போய் மகனுடன் இருங்கள்” கலைத்துவிட்டாள் சுகந்தி.


மாமியாரை எந்தக் குறையுமின்றிப் பார்க்கின்றாள் மருமகள்.

Thursday 1 February 2018

நீலத் தாமரை (Blue Lotus Water Garden)

ஊர்சுற்றிப் புராணம் -மெல்பேர்ண்

மெல்பேர்ணில் இருந்து காரில் சென்றால், ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களில் யாராவலியை (Yarra Junction / Yarra Valley) அடைந்துவிடலாம். அங்கேதான் இந்த இந்த அற்புத தாமரைத் தடாகத்தைக் கண்டு கொண்டேன். மார்கழி மாதத்தில் இருந்து சித்திரை மாதம் வரை (கோடை / இலையுதிர்காலம்) பார்வைக்காகத் திறந்திருக்கின்றார்கள்.

2006 ஆம் ஆண்டு Geoff, Yvonne என்பவர்களால் இது உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.  50,000 சதுர மீற்றர் (14 ஏக்கர்) பரப்பளவு கொண்ட இந்த நீர்த் தோட்டத்தில் தாமரை, நீலோற்பலம் மற்றும் அரிய வகையிலான ஆயிரத்திற்கும் மேற்பட்ட நீர்த்தாவரங்கள் உள்ளன. இங்கே 12 குளங்கள், 2 ஏரிகள், பல நீரூற்றுகள் உள்ளன. இவற்றை பாலங்களும் நடைபாதைகளும் இணைக்கின்றன.

Friday 26 January 2018

`பன்முகம்’ - நூல் அறிமுகம்

ஜெயராமசர்மா அவர்கள் பேராதனைப்பல்கலைக்கழக தமிழ் சிறப்புப் பட்டதாரி. அத்துடன் கல்வியியல் சமூகவியல் துறைகளில் டிப்ளோமா, கற்பித்தல் நுணுக்கத்தில் முதுதத்துவமானி பட்டங்களைப் பெற்றவர். இவர் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், தமிழ் – இந்து கலாசார விரிவுரையாளர், ஆசிரிய ஆலோசகர், வானொலி அறிவிப்பாளர் எனக் கடமை ஆற்றியுள்ளார்.

இதுவரை பதினொரு நூல்கள், இருபது நாட்டியநாடகங்கள், பத்து வில்லுப்பாட்டுகள், பல ஓரங்க நாடகங்கள், கோவில்களுக்கான திருப்பொன்னூஞ்சல்கள் எழுதியுள்ளார்.

Thursday 18 January 2018

உதவிக்கு ஒருவன், உளறுவதற்குப் பலர்.

(50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை)

இரவு வேலைக்கு வரும்போது நண்பன் ராமின் கார் விபத்திற்கு உள்ளாகிவிட்டது. மனைவி தனது காரில் அவனை வேலை செய்யுமிடத்திற்குக் கூட்டி வந்திருந்தாள்..

அவனது நாட்டவர்கள் சூழ்ந்து விசாரித்துக் கொண்டிருந்தார்கள்.
வேலை தொடங்கிவிட்டமையால் விபரம் அறிய முடியவில்லை. அவனும் எனக்கொன்றும் சொல்லவில்லை.
ஓய்வு கிடைத்தபோது என்னிடம் வந்தான்.

“ஒருகிழமைக்கு வேலை முடிய என்னை வீட்டில் கொண்டுபோய் விடுவாயா நண்பனே? வரும்போது மனைவியுடன் வருவேன். நள்ளிரவில் மனைவியைக் கூப்பிட தயக்கமாக உள்ளது.”



Friday 12 January 2018

புதைகுழித் தோட்டம் (Sinkhole Garden)


ஊர் சுற்றிப் புராணம் – தெற்கு அவுஸ்திரேலியா

மவுன்ற் கம்பியர் (Mount Gambier) பிரதேசத்தில் பல நூற்றுக்கணக்கான குகைகளும் புதைகுழிகளும் காணப்படுகின்றன. சுண்ணாம்புக் கற்பாறைகள் காலத்துக்குக் காலம் கடல்நீரினாலும் மழை நீரினாலும் அரிக்கப்படுவதினால் இவை தோன்றுகின்றன.

இப்படிப்பட்ட புதைகுழியில் அமைந்த அதிசயமான நிலக்கீழ் தோட்டம் சண்கென் தோட்டம் (Sunken Garden). இதை அம்பேஸ்ரன் சிங்ஹோல் (Umpherston Sinkhole) என்றும் சொல்வார்கள்.
 

1864 ஆம் ஆண்டு ஜேம்ஸ் அம்பேஸ்ரன் என்பவர் மவுன்ற் கம்பியரில் ஒரு நிலப்பரப்பை வாங்கினார். அந்த நிலப்பரப்பில் இருந்த புதைகுழியை 1884 ஆம் ஆண்டு ஒரு அழகிய தோட்டமாக வடிவமைத்தார். ஆரம்பத்தில் இங்கே ஒரு குளமும் இருந்தது. 1900 ஆம் ஆண்டில் ஜேம்ஸ் அம்பேஸ்ரன் இறந்துவிட கவனிப்பாரற்றுக் கிடந்தது. 1949 வாக்கில் தெற்கு அவுஸ்திரேலியாவிற்கான மரம் மற்றும் காடு சார்ந்த திணைக்களம் அந்த நிலப்பரப்பை வாங்கி அதன் அருகில் ஒரு மரம் அரியும் தொழிற்சாலையையும் நிறுவியது. விவசாய நடவடிக்கைக்களால் நீர் வற்றிப்போக  குளமும் மறைந்துவிட்டது.